ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்வதா?

 
ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்வதா?

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்வதா? என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த சூழலில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் முக்கியப்பங்காற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்ஸிஜன் தயாரித்து இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட்டை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அனுப்பியிருப்பதாகவும், அதனால் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் உள்ள வேறு ஆலைகளில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என தமிழக அரசு கூறியது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்த தயாரா? தமிழக அரசு எடுத்து நடத்தினாலும் கவலையில்லை என தலைமை நீதிபதி யோசனை தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ஆலையை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும், ஸ்டெர்லைட் ஆலை மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறினார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என அரசு சொல்வதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆலயை திறக்க முடியாது என சொல்லக்கூடாது என்று குறிப்பிட்டனர்.

From around the web