இனி வருங்காலங்களில் தமிழ் வழியில் தேர்வு - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு

 
TNSPC

இனி வரக்கூடிய காலங்களில் தமிழில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் கா.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் புள்ளியியல் துறை பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் நான்கு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 79 மையங்களில் 32 ஆயிரத்து 262 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

தஞ்சாவூர் மகர் நோன்பு சாவடியிலுள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் தேர்வு மையத்தை ஆணைய தலைவர் கா.பாலச்சந்திரன் பார்வையிட்டார்.

அதன்பின் செய்தியாளரிடம் அவர் கூறியதாவது, “கடந்த 9-ம் தேதி ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வுகள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது .

இனி வரக்கூடிய காலங்களில் தேர்வுகள் தமிழ் வழியில் நடத்தப்படும். தற்போது நடைபெறும் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டபோது, தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெளியாகாததால் வழக்கம்போல நடைபெறுகிறது.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்வில் இருவிதமான பணிகள் இருக்கும். குரூப்-4 தேர்வில் கொள்குறி வகை தமிழில் இருக்கும்.

மற்ற குரூப் 1, 2, 2ஏ ஆகிய தேர்வுகளில் விரிந்துரைக்கும் வகையிலான வினாத்தாள் இருக்கும். இதில் 40 மதிப்பெண்களுக்கும் அதிகமாக எடுத்தால் மட்டுமே மற்ற கேள்விகளுக்கான பதில்கள் திருத்தப்படும்.

குரூப்-4 தேர்விலும் 40-க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றால்தான் தொடர்ந்து அவர்கள் எழுதிய அனைத்து விடைகளும் மதிப்பீடு செய்யப்படும். தமிழில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களை தகுதி மதிப்பெண்களாக மட்டுமல்லாமல், எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அதனையும் சேர்த்து கொள்ளும் வாய்ப்பை தேர்வாணையம் செய்கிறது” என கூறினார்.

From around the web