நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்... செவிலியர்களுடன் சத்ரியன் படம் பார்த்தேன்.. விஜயகாந்த் ட்வீட்

 
Vijayakant

துபாயில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் தான் நலமாக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் தேமுமுக தலைவர் விஜயகாந்த் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். முக்கிய சந்திப்புகளில் மட்டும் பங்கேற்கிறார்.

கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து உயர் சிகிச்சைக்காக தான் அமெரிக்கா செல்லப் இருப்பதாக அண்மையில் விஜயகாந்த் அறிவித்திருந்தார். கடந்த மாதம் 25-ம் தேதி வீட்டிலேயே தனது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடி முடித்த விஜயகாந்த் கடந்த 0ஆம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் சிகிச்சைக்காக விஜயகாந்த் துபாய் புறப்பட்டு சென்றார்.

அப்போது அவரது உதவியாளர்கள் வீல் சேரில் வைத்து விஜயகாந்தை வேகமாக தள்ளிக் கொண்டே விமான நிலையத்திற்குள் நுழைந்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது தொண்டர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தான் நலமாக இருப்பதாக விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதில், “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கால் மேல் கால் போட்டுக் கொண்டு கெத்தாக விஜயகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

From around the web