வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவன்; கர்ப்பிணி பெண் தற்கொலை

 
Karaikal

வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், கணவன் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் பாரத் (வயது 27). இவரது மனைவி வினோதா (வயது 22). இருவரும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது வினோதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். கூலி வேலை செய்துவரும் பாரத், மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில்  பெற்றோரிடம் வரதட்சணையாக நகை, பணம்  வாங்கி வரும்படி வினோதாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

இதற்கு பாரத்தின் தாயார் ஜோதி (வயது 42), அக்கா பரிமளா (வயது 30) ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் கொடுமை அதிகரித்ததால் மனமுடைந்த வினோதா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது வினோதா, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தெரியவந்ததும் வினோதாவின் தந்தை வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே இதுபற்றி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் “வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் பாரத், மாமியார் ஜோதி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான அக்கா பரிமளாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் காரைக்காலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web