ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது - தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

 
High Court

தமிநாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் அனுமதியின்றி மலைப்பகுதி கட்டிடங்கள் சட்ட விதிகளை மீறி, மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர் கட்டும் ரிசார்ட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், மரங்கள் வெட்டப்பட்டு, இயற்கை எழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பறவைகள் மாயமாகி வருவதாகவும், நீரோடைகள் தடுக்கப்படுவதால் நிலச்சரிவுகள் ஏற்படுவதாகவும் தனது மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுசம்பந்தமாக மாவட்ட வனத்துறை அதிகாரி, கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வனப்பகுதியில் கட்டுமான பொருட்கள் வைக்க தடை விதிக்க வேண்டும் எனவும், வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்தீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும் எனவும், இதுசம்பந்தமான வனத்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும் தமிழ்நாட்டில் ஒரு அங்குல வனப்பகுதி நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

From around the web