தனக்கு விளக்கம் தேவையில்லை; கட்டண முறை மாற்றம் தான் தேவை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இயக்குநர் தங்கர் பச்சான் விளக்கம்

 
 ThangarBachan

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரிபார்க்கக் கோரி அல்ல; மாதாந்திர மின் கட்டண முறையை செயல்படுத்தாத காரணத்தினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான் என, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தங்கர் பச்சான் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

மாதம்தோறும் மின் கட்டணத்தை கணக்கிட்டால் தமிழ்நாடு மக்கள் பல மடங்கு தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டியதிருக்காது என்ற கோரிக்கையை இயக்குநர் தங்கர் பச்சான் சில நாட்களுக்கு முன்னர் விடுத்திருந்தார்.

அதன்பின்னர், “மின் கணக்கை சரிபார்த்து விளக்கம் அளிக்க எனது வீட்டுக்கு இரண்டு முறை வந்த அதிகாரிகள், கட்டணம் குறித்த விவரங்கள் அடங்கிய தாள் ஒன்றைக் கொடுத்து, அதை படமெடுத்துச் சென்றனர்” என தங்கர் பச்சான் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், தங்கர் பச்சானின் மின் கட்டணம் கணக்கு குறித்து விளக்கம் அளித்து விட்டதாக பதிவிட்டார். இதனிடையே, சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கணக்கீட்டில் குளறுபடி உள்ளதாக சமூக வலைதளங்களில் தங்கர் பச்சான் புகார் தெரிவித்ததாகவும், உடனே அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்து விட்டதாகவும், அதன் பின் அவர் ‘சாரி’ என்று கூறி விட்டதாகவும் தெரிவித்தார்.

ThangarBachan-Home

இதையடுத்து, தனக்கு விளக்கம் தேவையில்லை; கட்டண முறை மாற்றம் தான் தேவை’ என்ற கோரிக்கையை மீண்டும் தெளிவு படுத்தியிருந்தார் தங்கர் பச்சான். இந்த நிலையில், மின் கட்டண கோரிக்கை தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப்பின் மன்னிப்பு கோரியதாகவும் இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கேள்வி ஒன்றுக்கு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார்.

Senthil-Balaji

இதன்மூலம் உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டப்பேரவையில் பதிவு செய்ததுடன், ஒரு மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு முதல்வருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார்.

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரிபார்க்கக் கோரி அல்ல; மாதாந்திர மின் கட்டண முறையை செயல்படுத்தாத காரணத்தினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான்.

MKS

சட்டமன்றத் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்தின் போதும், திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி நான கோரிக்கை விடுக்கின்றேன்.

இது என்னுடைய வீட்டின் பிரச்னை மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் பிரச்னை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன். இப்பொழுதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கையை உணர்ந்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வார் என நம்புகின்றேன்” என்று, தங்கர் பச்சான் அதில் கூறியுள்ளார்.

From around the web