கோவில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

 
Vinayagar

சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும் வழிப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்  தளர்த்தப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு சாலைகளில் சிலைகளை வைத்து வழிபட மக்கள் தயாராகி வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் காரணமாக கொரோனா பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், நிலையான செயல்பாட்டு விதிகளை வகுக்க வேண்டுமென ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும் மனு கொடுத்தும், இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான விதிகளை வகுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபி-க்கும்  உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், விநாயகர் சதுர்த்தியன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒன்றிய அரசு அனுப்பி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் பொது இடங்களில் இந்த ஆண்டும்  கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

சிறிய கோவில்கள் திறந்து இருக்க அனுமதிக்கப்படும். வழிப்பட்ட சிலைகளை இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும் என கூறினார்.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியமில்லை என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

From around the web