கொரோனா தடுப்பூசி போட்டால் தங்க நாணயம் பரிசு... நூதன விழிப்புணர்வு ஏற்படுத்திய தாசில்தாருக்கு குவியும் பாராட்டு!

 
Vaccine

குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் அறிவித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்திற்கு உட்பட்ட பவானி அம்மாபேட்டை ஒன்றியங்களில் நாளை சிறப்பு கொரானா தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. இதனை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் பவானி வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தி பொது மக்களை கவர்ந்துள்ளார்கள்.

அதன்படி, பவானி வட்டத்திற்குட்பட்ட பவானி அம்மாபேட்டை பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் தனது ஜீப்பை நிறுத்தி ஒலிபெருக்கி மூலம் அழைப்பு விடுத்து துண்டு பிரசுரம் வழங்கினார்கள்.

இன்று ஒரே நாளில் 27 ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி அழைப்பு விடுத்துள்ளனர். அதில் கொரானா தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்படும். மாலையில் குலுக்கல் நடைபெறும்.

அதில் முதல் பரிசு ஒரு கிராம் தங்க நாணயம் இருவருக்கும், 2-ம் பரிசு ரூ. 3,000 மதிப்புள்ள குத்துவிளக்கு ஒருவருக்கும், 3-ம் பரிசு ரூ.500 மதிப்புள்ள புடவை 5 பேருக்கும் ஜரிகை பட்டு வேஷ்டி 5 பேருக்கும், ஆறுதல் பரிசு ரூ.300 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன் 3 பேருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு செய்து பரிசு பொருட்களை காட்சி படுத்தப்பட்டது.

இதுவரை வெறும் நகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலமும் வீடு வீடாக துண்டு பிரசுரமும் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த நிலையில், குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் அறிவித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்வது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web