தங்கத்தை கொடு தாயத்து செய்து தருகிறேன்... மோசடி செய்த போலி அண்டா சாமியார் கைது

 
Skathi

விளாத்திகுளத்தில் குறி சொல்வதாக பெண்னின் வீட்டை இடிக்க வைத்து, 7 சவரன் நகை மோசடி செய்த போலி அண்டா சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (வயது 37). இவர், விளாத்திக்குளம் - நாகலாபுரம் சாலையில் ‘சக்தி வாராகி’ என்ற பெயரில் ஜோதிட நிலையம் வைத்துள்ளார். இவரிடம், விளாத்திக்குளம் அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி தங்க பேச்சியம்மாள் (வயது 52), கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்று குறி கேட்டுள்ளார்.

அப்போது சக்தி அந்தப் பெண்ணிடம், “இறந்துபோன உன் கணவரின் ஆன்மா சாந்தியடையாததால் பல்வேறு பிரச்சினைகள் வருவதாகவும், உனது வீட்டை இடித்து மாற்றி அமைத்தால் தான் உன் கணவரின் ஆன்மா சாந்தியடையும்” என்று கூறியுள்ளார். அதற்கு, பணம் இல்லை என்று கூறிய அந்த பெண்ணிடமிருந்து இரண்டரை சவரன் நகையை பெற்றுக் கொண்டு ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து வீட்டை இடிக்கச்சொல்லி உள்ளார்.

Sakthi

அந்த பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துள்ளார். அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்னைகள் தீராததால் அப்பெண் மீண்டும் சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்.

அப்போது அவர் அந்த பெண்ணிடம் உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், ரூ.3,500 பணத்தையும் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, பூஜையில் வைத்து தருகிறேன் உனது பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்தப் பெண்ணும் 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர், இதுவரை தாயத்து கொடுக்கவில்லை. அதை கேட்ட அந்த பெண்ணிடம், உனக்கு செய்வினை வைத்து கை, கால் விளங்காமல் செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தங்கப்பேச்சியம்மாள் அளித்த புகாரை அடுத்து போலீசார் போலி அண்டா சாமியார் சக்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

From around the web