தவறு செய்யவில்லை.. ஏன் இப்படி கூறுகிறார்கள்... தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் கடிதம்!

 
Karur-school-teacher

தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தன்னை ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்த கடிதத்தில் ஆசிரியர் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் காமராஜர் நகரில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 42). இவர் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயந்தி (42) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர் பணிபுரிந்து வந்த அதே பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தான், பாலியல் தொல்லையால் தற்கொலை செய்வதாக  கூறி கடிதம் எழுதி வைத்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கணித ஆசிரியர் சரவணன் திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது மாமனார் நடராஜன் என்பவரது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து, இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆசிரியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் மாணவர்கள் தன்னை தவறாக நினைப்பதாகவும், மாணவர்கள் முன் தனக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தன்னை ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் அந்த கடிதத்தில் சரவணன் குறிப்பிட்டுள்ளார். மாணவியின் தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஆசிரியர் சரவணனின் தற்கொலையும், அவரது உருக்கமான தற்கொலை கடிதமும் இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web