அரசியல் செய்ய கடவுள்தான் கிடைத்தாரா..? அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்

 
Sekarbabu

கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,

“வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரும் சாமியின் திருப்பெயரைக் கொண்டிருக்கிறார்.

இறைவனை முன்னிறுத்தி அரசியல் செய்து, அதன் வாயிலாகத் தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது, ஒன்றாக வாழுகின்ற மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற செயல்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.

யாரையும் வழிபட வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்தே சிறப்பாக வழிபடலாம். விநாயகர் வேண்டிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார். விநாயகர் அகவல் அனைவருக்கும் நன்மைகளைச் செய்யும்.” என்றார்.

From around the web