கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..! முழு ஊரடங்கு அமலாகுமா..?

 
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..! முழு ஊரடங்கு அமலாகுமா..?

தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் தற்போது காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் மட்டும் ஆலோசனை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் வாயிலாக கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு, கொரோனா தொற்று அதிகரித்துள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரம் இன்று மருத்துவ நிபுணர்கள் உடனான உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது.

From around the web