உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுகவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

 
CM-Stalin

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசி, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு, வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூரும் தனி மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன.

இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆனால் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செப்டம்பர்15-ந் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்தநிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் நாளை (செப்., 6) ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட திமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் , ஒன்றிய செயலாளர்கள் , சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web