கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!

 
CM-Stalin-visits-Kanniyakumari

கன்னியாகுமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இன்னும் வடியாமல் உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த நெல், வாழை, ரப்பர், தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கால்வாய்கள், குளங்களில் உடைப்பு ஏற்பட்டதோடு, கடும் வெள்ளத்தால் பல சாலைகளும் சேதமடைந்தன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் குமரி மாவட்டம் வரும் அவர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் தோவாளை பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து திருப்பதிசாரம், தேரேகால் பகுதியில் கால்வாய் கரை உடைப்பு, குழாய் மற்றும் சாலை சேதங்கள் ஆகியவற்றை முதல்வர் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து பேச்சிப்பாறை பகுதிக்கு சென்று அணை மற்றும் வெள்ள சேத பகுதிகளையும், மணவாளக்குறிச்சி பெரிய ஏலா பகுதியில் வெள்ள சேத பகுதிகளையும் பார்வையிடுகிறார்.  

இதையடுத்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுடன் வெள்ள சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்கிறார். ஆய்வு கூட்டம் முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலையில் கார் மூலம் நெல்லை புறப்பட்டு செல்ல உள்ளார்.

From around the web