தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் கூடுதலாக சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா 2-ம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை , மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இதனையடுத்து அந்த மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் அனுமதி.
கொரோனா பரவல் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதர 27 மாவட்டங்களில் சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
- பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு அனுமதி
- கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி
- மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி விற்பனை, பழுது பார்க்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி
- தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சலூன்கள், டாஸ்மாக் உள்ளிட்டவை திறக்க அனுமதி கிடையாது
- பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைபயிற்சி செய்ய அனுமதி
- கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
- கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
- அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்
- கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.
- பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் அனுமதிக்கப்படுவர்,
- மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதி
- வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி
- வாடகை டேக்ஸிகளில்,ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதி
- கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதி
- மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி
- அழகு நிலையங்கள், சலூன்கள் குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி
- டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி
- செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதி