மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா கொண்டாட்டம்

 
Tanjore

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சோழ சாம்ராஜ்யத்தின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவர் ராஜராஜ சோழன். இவரது இயற்பெயர் அருண்மொழிவர்மன் ஆகும். இவரது முப்பதாண்டு ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வரலாற்றில் மட்டுமல்லாது தென் தமிழ்நாடு வரலாற்றிலும் மிக முக்கியமானதாக விளங்குகிறது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் இவரது ஆட்சிக்காலத்தில் தான் கட்டப்பட்டது.

இவரது காலத்தில் சோழப் பேரரசு ஆட்சி முறை, ராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்டது. இவர் பேரரசர் சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்தார். இவரது பிறந்த நாள் சதய விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இன்று தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பொதுவாக 2 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவானது கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது.

சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை மங்கள இசையுடன் சதய விழா தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதி உலா, கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஓதுவார்கள் வேத மந்திரங்களை முழங்க, மங்கள வாத்தியங்களுடன் பெரிய கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மாலையை மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மாமன்னர் ராஜராஜ சோழனின் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து தஞ்சை பெருவுடையாருக்கு 46 திவ்ய அபிஷேகமும் நடைபெற இருக்கிறது.

From around the web