கடலூர் எம்.பி ரமேஷை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு

 
Ramesh

திமுக எம்.பி. ரமேசை சிபிசிஐடி போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பணிக்குப்பத்தில் உள்ள கடலூர் எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி கோவிந்தராசு (வயது 55) அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கடலூர் திமுக எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன் (வயது 31), முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல் (வயது 49) மற்றும் தொழிலாளர்கள் அல்லாபிச்சை (வயது 53), சுந்தர் என்கிற சுந்தர் ராஜ் (வயது 31), வினோத் (வயது 31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த 9-ந் தேதி காலை நடராஜன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் எம்.பி.யை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி அவரை 2 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவருக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் எம்.பி. கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் எம்.பி. ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் அவரை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில், மனுவை ஏற்ற நீதிபதி பிரபாகரன், சிபிசிஐடி போலீசாருக்கு ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

From around the web