கொங்கு மண்டலத்தில் செங்கல் தட்டுப்பாடு! சின்னத் தடாகம் சூளைகளுக்கான தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

 
Brick

அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டு கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கட்டுமானப் பணிகள் பாதிப்படைந்துள்ளது. கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானங்களுக்கு தேவையான செங்கல்கள்,  சின்னத்தடாகத்தில் செயல்படும் 140-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளிலிருந்து பெருமளவில் அனுப்பப்பட்டு வந்தன.

அனுமதியின்றியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும் வகையிலும் செயல்படுவதாக கூறி அரசு தரப்பில்  சின்னத்தடாகத்தில் உள்ள செங்கல் சூளைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இங்கு செங்கல் உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.தயாரிக்கப்பட்ட செங்கல்களையும் விற்பனை செய்ய உற்பத்தியாளர்கள் மறுத்து விட்டனர்.

சின்னத்தடாகத்தில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் ஆலாந்துறை, கோவனூர், வெள்ளியங்காடு பகுதிகளில் செயல்படும் சூளைகளில் இருந்து உற்பத்தியாகும் செங்கல் விலை உயர்ந்துள்ளது. வீடுகட்டுவோர் திட்டமிட்டதைவிட கூடுதலாக செலவழிக்கப்பட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட நிர்வாகம் மனது வைத்தால்தான் இப்பிரச்சினை முழுமையாக தீரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சி.ஆர்.ராமச்சந்திரன், " சின்னத்தடாகம் செங்கல் சூளைகள் பிரச்சினையை மாவட்ட நிர்வாகத்தினால்தான் தீர்க்கமுடியும். அரசின் வழிகாட்டுதலின் படி முழுமையாக விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் செங்கல் சூளைகளை இயக்க நாங்கள் தயாராக உள்ளோம்.

சென்னை உயர்நீதிமன்றமும் கோவை மாவட்ட கலெக்டர் சின்னத்தடாகத்தில் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படத் தகுதியுள்ள சூளைகளைகண்டறிந்து தகுந்த முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அப்பணி  இன்னும் தொடங்கவில்லை. எனவே கோவை மாவட்ட கலெக்டர் இதுகுறித்து தனிக்கவனம் செலுத்தி செங்கல் உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

செங்கல் விலை கடுமையாக ஏறியுள்ளதால வீடுகட்டும் நடுத்தர வர்க்க மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சின்ன தடாகம் செங்கல் சூளைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்கி. செங்கல் விலையை குறைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

From around the web