ஆர்ப்பரிக்கும் குற்றால அருவிகள்! சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

 
Courtalam

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலும் சீசன் களை கட்டும். தமிழ்நாட்டிலேயே தனித்துவம் வாய்ந்த அருவிகள் நிறைந்த சுற்றுலாத்தளமாக குற்றாலம் திகழ்ந்து வருகிறது. வரலாற்றுப்பூர்வமாகவும் குற்றாலத்திற்கு தனிப்பெருமை உண்டு. திரிகூடராசப்பர் எழுதிய குற்றாலக் குறவஞ்சி தமிழ் இலக்கியங்களுள் முக்கியமான ஒன்றாகும்.

குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் மே மாதம் தொடங்கியது. தொடர்ந்து சாரல் மழை பெய்து அருவிகளில் தண்ணீர் விழுந்தது. பின்னர் மழை குறைந்து வெயில் அடித்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டில் இருந்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.  இடையில் சில நாட்கள் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதித்தாலும், மீண்டும் தொற்று பரவல் அதிகரித்ததால் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை தூவியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் குற்றாலத்தில் பகலில் குளுமையான சூழல் நிலவி ரம்மியமாக காட்சி அளித்தது. 

நீர்வரத்து அதிகரித்ததால் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் பரவலாக விழுகிறது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோன்று பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, குற்றாலம் அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  தடுப்புகள் அமைத்து  போலீசார் கண்காணித்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்று பார்க்கலாம்!

From around the web