தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம்!!

 
Annamalai

தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து, ஓரிரு மாதங்கள் கழித்து பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பாஜக தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்தெடுக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

அதிமுக கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பாஜக, 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.

இந்நிலையில் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதிய ஒன்றிய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஒன்றிய இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார்.

இதனையடுத்து தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. தமிழ்நாடு பாஜகவின் துணைத் தலைவராக உள்ள அண்ணாமலை அடுத்த பாஜக தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அண்ணாமலை கர்நாடகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web