அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17-ந் தேதிக்கு மாற்றம்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Jallikattu

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகிற 16-ந் தேதிக்கு பதில் 17-ந் தேதி நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் பேட்டியில் கூறியுள்ளார்.

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில், தமிழ்நாடு வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, மதுரை அவனியாபுரத்தில்
ஜல்லிக்கட்டு போட்டிகள் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெறும்.  பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி ஞாயிற்றுகிழமையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதனால், ஊரடங்கை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள், திட்டமிடப்பட்ட 16-ந் தேதிக்கு பதிலாக அதற்கு அடுத்த நாளான 17-ந் தேதி நடைபெறும்.

அலங்காநல்லூர் விழா குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

From around the web