அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்!
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அதிமுக அவைத்தலைவராக இருந்து வருபவர் மதுசூதனன். இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். சசிகலாவை தீவிரமாக ஆதரித்து வந்த மதுசூதனன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கிய காலத்தில் அவருடன் கை கோர்த்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் காரணமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து மருத்துவர்கள் அவரை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.