அதிமுக முன்னாள் அமைச்சர் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

 
Manikandan

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. இவர் நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொன்னார். 5 வருடங்கள் நானும், அவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்தோம். 3 முறை அவர் மூலம் கர்ப்பம் அடைந்தேன். அவரது மிரட்டலின் பேரில் கருவை கலைத்தேன். இப்போது என்னை திருமணம் செய்ய மறுத்து அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனு மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த புகாரை மணிகண்டன் மறுத்து பேட்டி கொடுத்தார். நடிகை சாந்தினி யார், என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இந்த பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்,  முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது புகார் அளித்துள்ளதாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் தன்னை மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

From around the web