அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைகிறாரா..?

 
Thoppu-Venkatachalam

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் தோப்பு வெங்கடாச்சலம் அதிமுக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவருக்கு உடனடியாக அமைச்சர் பதவி அளித்தார். வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் பதவி வகித்தார்.

பின்னர் 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் தோப்பு வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார். ஆனால், இம்முறை ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை.

அதன் பின்னர் டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவும், 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவையும் பங்கேற்றது. அந்த அமைச்சரவையில் ஜெயலலிதா அமைத்த அதே அமைச்சர்கள் பங்கேற்றனர். கூடுதலாக அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் சேர்க்கப்பட்டார்.

அதன் பின்னர், தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதையடுத்து, அவர் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இதையடுத்து, தோப்பு வெங்கடாசலம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம் தோல்வியடைந்தார். பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயகுமார் வெற்றிபெற்றார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோப்பு வெங்கடாசலம் உட்பட 300 அதிமுக நிர்வாகிகள் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web