முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள்..!

 
DMK

அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் உட்பட 300 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்றார். அதன்பின் மாற்றுக் கட்சியினர் பலர் தங்களை திமுகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாற்றுக் கட்சியினர், திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கன்னியாகுமரி,  இராமநாதபுரம், தஞ்சை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள் அக்கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

2001-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக சார்பில் சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வ.து.ந.ஆனந்தன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தராஜனும் திமுகவில் இணைந்துள்ளார்.

இதேபோல் தஞ்சை மற்றும் ராமாநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக மாவட்ட பொறுப்பாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த மாற்று கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின், புத்தகம் மற்றும் திமுக கரை வேட்டிகளை பரிசளித்தார். மேலும் அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி திமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ., ஆஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.

From around the web