அரை நூற்றாண்டு காலம் உழைத்துதான் ஸ்டாலின் முதல்வரானார்... அதற்கு அடுத்தது நாம்தான்: அன்புமணி ராமதாஸ்

 
Anbumani

அரை நூற்றாண்டு காலமாக உழைத்துதான் முதல்வர் கனவை ஸ்டாலின் நனவாக்கினார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள், பரப்புரை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் சுமைதாங்கியில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசும்போது, “தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவோம். ஜனநாயகத்தின் அடித்தளமான உள்ளாட்சி தேர்தல் சட்டப்பேரவையை விட வலிமையானது. ஆகவே, இந்த உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களையும் வலிமையானவர்களையும் தேர்வு செய்யுங்கள்.

கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தோம். அவர்கள் 25 இடங்களில் இரண்டு இடங்கள் மட்டும் கொடுத்தார்கள். அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார்கள்.

அதனால்தான் நாம் தற்போது தனித்து போட்டியிடுகிறோம். அரை நூற்றாண்டு காலம் உழைத்துதான் ஸ்டாலின் முதல்வர் கனவை நினைவாக்கினார். அதைப்போல், பாமகவும் தனது கனவை நினைவாக்க பாடுபடுகிறது.

மாநில சுயாட்சி கோரிக்கையை அண்ணா முன் வைத்தார். அது நியாயமானது தான். அதனால் தான் பாமக அந்த கோரிக்கையை வரவேற்கிறது. மாநில பட்டியலில் கல்வி இருந்திருந்தால் இன்று நீட் தேர்வு பிரச்சினை வந்திருக்கிறது. நீட் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆதரவளிக்கிறது” என்று பேசினார்.

வேலூர் அடுத்துள்ள பொய்கை சந்தைப் பகுதியில் கொட்டும் மழையில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல் என நினைக்க வேண்டாம். நான் எம்.பியாக இருக்கிறேன். எனக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ரூ.5 கோடி தொகுதி நிதி இருக்கும். அதையும் பிடுங்கி விட்டார்கள். எம்எல்ஏக்களுக்கும் அதிகாரம் கிடையாது. சட்டப்பேரவையில் பேசலாம் அவ்வளவுதான்.

ஆனால், ஊராட்சி மன்ற தலைவருக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது. கிராம சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால் அதை எந்த அதிகாரியாக இருந்தாலும் செய்து முடிக்க வேண்டும். ஸ்டாலின் நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து முதல்வரானார். அவரது ஆசை நிறைவேறிவிட்டது. அதற்கு அடுத்தது நாம்தான். தீபாவளி முடிந்ததும் ஊர், ஊராக வரப்போகிறேன். பெரிய கூட்டம் போட்டு கல்வி, சுகாதாரம், விவசாயம் எப்படி இருக்க வேண்டும் என்றும் மது ஒழிப்பு எப்படி கொண்டு வருவோம் என்று சொல்லப் போகிறேன்” என்று பேசினார்.

From around the web