ராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பதால் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை - நடிகை குஷ்பு

 
Kushboo

ராகுல் காந்தியின் செல்போனை உளவுபார்ப்பதால் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை என நடிகை குஷ்பு கூறியுள்ளார்.

இந்தியாவில் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.  இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டன என கூறப்பட்டது.  5 முறை தொலைபேசியை மாற்றியும், என்னை உளவு பார்த்தனர் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

இதேபோன்று, பிரபல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என மொத்தம் 300 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் நடிகையும், பாஜகவை சேர்ந்தவரான குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது.  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் குஷ்பு புகார் அளித்துள்ளார்.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, நேற்று எனது ட்விட்டர் கணக்கிலிருந்து எனக்கு தெரியாமலேயே சில ட்வீட்கள் செய்யப்பட்டன. இன்று எனது கணக்கின் பெயர் மாற்றப்பட்டது. அதபின்னர் எனது ட்விட்டர் கணக்கின் மொத்த தகவல்களும் அழிக்கப்பட்டன.

என்னுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு இப்போது மீண்டும் காட்டுகிறது. ஆனாலும் என்னால் என் கணக்கை பயன்படுத்த முடியவில்லை. இது தொடர்பாக நான் ட்விட்டரில் புகாரளித்தபோது எனது பாஸ்வேர்டு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அவர், எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், அதனை தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். ராகுல்காந்தி செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ராகுல் காந்தியின் செல்போனை உளவுபார்ப்பதால் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை. ஆளுநர் பதவிக்கு வரும் அளவிற்கு எனக்கு வயதாகவில்லை என தெரிவித்தார்.

From around the web