ஜெய்பீம் ‘செங்கேணி’ பார்வதி அம்மாவுக்கு ரூ.15 லட்சத்தை வழங்கினார் நடிகர் சூர்யா!

 
Suriya-donates-15-lakhs

ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை நடிகர் சூர்யா வழங்கினார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

படத்தின் கரு பலராலும் பேசப்பட்ட அதே சமயம், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் சர்ச்சையாயின. இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவை பாராட்டி எழுதிய கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு உதவிடக் கோரியிருந்தார்,

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா பார்வதி அம்மாவிற்கு உதவும் விதமாக ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு பார்வதி தனது குடும்பத்தினருடன் வருகை தந்தார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன, ராஜாக்கண்ணு வழக்கில் ஆரம்பத்திலிருந்து போராடி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கோவிந்தன், உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

நடிகர் சூர்யா உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், ஜெய்பீம் திரைப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் சூர்யாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குனர் ஞானவேலும் இந்த திரைப்படத்தை திறம்பட இயக்கி உள்ளார். அடித்தட்டு மக்கள் மீது அராஜகத்தையும், அக்கிரமத்தையும் காவல் துறையோ அல்லது ஆதிக்க சக்திகளோ நிகழ்த்தும் போது அதைத் தட்டிக் கேட்டு நீதி பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் ஜெய்பீம் படம் எடுத்து சென்றுள்ளது.

தற்போது வறுமையால் வாடும் பார்வதிக்கு பொருளாதார உதவி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுகொண்டோம். அதனை ஏற்று தற்போது 15 லட்ச ரூபாய் வைப்பு நிதி வழங்கி அதற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார். 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பில் 5 லட்சம் ரூபாயும், சூர்யா தனிப்பட்ட முறையில் 10 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது.

வைப்பு நிதியில் வரும் வட்டி பணத்தை பார்வதி மாதம் மாதம் எடுத்துக்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிறகு அந்த தொகையை அவரது குடும்பத்தினர் பிரித்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

ஜெய்பீம் திரைப்படத்தை தமிழ்நாடு முதல்வர் பாராட்டியது மட்டுமல்லாமல் இருளர் சமூக மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளையும் வழங்கியுள்ளார். எனவே அவரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாராட்ட உள்ளதாகவும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

From around the web