வழிப்பாட்டுக்கு தடை; வசூலுக்கு வரவேற்பு: பக்தர்கள் அதிருப்தி..!

 
Rameswaram

தரிசனத்திற்கு தடை விதித்துவிட்டு, காணிக்கை வசூலுக்கு முக்கியத்துவம் தரும் அரசின் செயல் பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலைக் காரணம் காட்டி, தமிழ்நாட்டில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்கள் வழிபட அரசு தடை விதித்துள்ளது. இது, பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், கோயில்களில் காணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ள இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ‘ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தலாம்’ என சமீபத்தில் அறிவித்தது. தற்போது, பூட்டிக்கிடக்கும் கோயில்களுக்கு வரும் பக்தர்களிடம் காணிக்கையை மட்டும் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Rameswaram

அதன்படி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே இருந்த உண்டியலை, காணிக்கை வசூலுக்காக கிழக்கு வாசல் முன் மண்டபத்திற்கு மாற்றியுள்ளனர். பூட்டி இருக்கும் கோயில் முன் வந்து வணங்கும் பக்தர்கள் உண்டியலை பார்த்ததும் அங்கிருக்கும் ஊழியர்களிடம் காணிக்கையை வழங்கி உண்டியலில் சேர்க்கச் சொல்வர் என திட்டமிட்டு கோயில் நிர்வாகம் இதை செயல்படுத்தியுள்ளது.

தரிசனத்திற்கு தடை விதித்துவிட்டு, பக்தர்களின் காணிக்கை வசூலுக்கு முக்கியத்துவம் தரும் அரசின் செயலுக்கு பக்தர்களிடயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணியின்  பொதுச் செயலாளர் ராமமூர்த்தி கூறும்போது, “பக்தர்களின் உணர்வை, ஆன்மிகம் சார்ந்த விஷயத்தை அரசு வியாபாரமாக மாற்றியுள்ளது. அவர்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிறது” என்றார்.

From around the web