திடீரென்று திரும்பிய கார்! சிங்கப்பூர் சாலை விபத்தில் தமிழக இளைஞர் பலி!!
சிங்கப்பூரில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் உள்பட இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.
சனிக்கிழமை அதிகாலையில் மலேசியாவைச் சேர்ந்த 27 வயது முகம்மது ரஃபீக் முகம்மது ஃபாரூக் என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். அவருடன் பின் இருக்கையில் தமிழ்நாடு கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த சுல்தான் அப்துல்காதர் ரஹ்மான் கரீம் என்ற 33 வயது இளைஞர் அமர்ந்து வந்துள்ளார்.
ஏர்போர்ட் ரோடு, ஹௌகேங் 3வது அவென்யூ சந்திப்பில், மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்து நினைவிழந்துள்ளனர்.சாங்கி பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.அங்கு அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் ஒரு ரெஸ்டாரண்டில் வேலை பார்த்து வந்துள்ளனர். அதிகாலை வேலைக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. சுல்தானுக்கு 22 வயது மனைவியும் 2 வயது மகளும் உள்ளனர். மேலும் சுல்தானின் பெற்றோரும் அவருடைய வருமானத்தை நம்பியே உள்ளனர்.
சுல்தானின் உறவினர் கலந்தர் மரைக்காயர் முகம்மது ரியாஸ், கார் திடீரென்று ஏர்போர்ட் ரோட்டுக்கு திரும்பியதால் இந்த விபத்து நடந்துள்ளதாகக் கூறியுள்ளார். சுல்தானின் இறுதிச் சடங்குக்காகவும், அவருடைய குடும்ப உதவிக்காகவும் கலந்தர் நிதி திரட்டி வருகிறார். உதவி செய்ய விரும்புகிறவர்கள் 8509 0786 என்ற எண்ணில் கலந்தரை தொடர்பு கொள்ளலாம்.
காரை ஓட்டி வந்த 39 வயது ட்ரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.