தற்கொலையில் தமிழகம் இரண்டாமிடம்!
சென்னை: மனச்சோர்வு, விரக்தி, தற்கொலை எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியே வரும் வகையில், ஆண்டுதோறும், அக்டோபர் முதல் வாரத்தில் உலக மனநலம் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் 2ஆவது இடத்தில் இருப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. விஞ்ஞானம் எந்த அளவுக்கு பரந்துவிரிந்து, வளர்ச்சியை நோக்கி செல்கிறதோ… அதே வேகத்தில் மனிதன் உலகம் செல்போன், இண்டர்நெட் என சுருங்கி வருகிறது.
இது மனிதனை தனிமைக்கு தள்ளி விரக்தி, மனச்சோர்வு போன்றவற்றை ஏற்படுத்தி தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை நிச்சயம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகதான் உள்ளது.
அதிலும், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்வோர் பட்டியலில் தமிழகம் இரண்டாவது மாநிலமாகவுள்ளது. உலக அளவில், ஒரு லட்சம் பேரில் 12 பேர் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில், தமிழகத்தில் அது 14 பேராக உள்ளது. மன அழுத்தம் எனப்படும் Depression காரணமாக, ஆண்களை விட பெண்களே ஒரு சதவீதம் அதிகமாக பாதிப்படைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒரு குழந்தை சரியாக தூங்காமலும், பேசாமலும் தனிமையை விரும்புகிறது என்றாலும் அல்லது அனைவரிடமும் கோபப்பட்டாலம், அந்த குழந்தையிடம் அதிக நேரத்தை பெற்றோர் செலவிட வேண்டும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள். அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 104 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகள் பெறாலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மன நிம்மதி, மகிழ்ச்சி மூலம் தற்கொலை எண்ணம் நம்மை மேற்கொள்ளவிடாமல் தடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரை.
– வணக்கம் இந்தியா