பிரதமரை வரவேற்க பேனர் தான் வேணுமா? – சுபஸ்ரீ தாயார் கேள்வி!
சென்னை: சீன அதிபருடன் மாமல்லபுரம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக அரசு சார்பில் பேனர் வைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இது மட்டும் தான் பிரதமரை வரவேற்கும் வழியா என்று பேனர் விபத்தில் இறந்து போன சுபஸ்ரீயின் தாயார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரம் வரையிலும் 14 இடங்களில் பேனர் வைப்பதற்காக தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில்அனுமதி கோரி மனு வழங்கப்பட்டது.
விசாரணையின் போது மாதிரி பேனர்களை அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷாயி அமர்வு முன் வைத்தார். திமுக வழக்கறிஞர் வில்சன் பேனர் வைக்க அரசு எப்படி வழக்கு தொடர முடியும். இதில் மறைமுகத் திட்டம் உள்ளது. துறை ரீதியாக மட்டுமே அனுமதி பெற வேண்டும் என்றார்.
ஆளுங்கட்சியின் சார்பில் பேனர் வைக்கமாட்டோம் என்று அரசு வழக்கறிஞர் உத்தரவாதம் கொடுத்தார். உத்தரவாதம் தேவையில்லை, சட்டத்திற்கு உட்பட்டு அரசு சார்பில் மட்டுமே பேனர் வைக்க அனுமதிக்க முடியும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக பேசியுள்ள சுபஸ்ரீயின் தாயார், “சுபஸ்ரீ மறைந்த சம்பவம் இன்னும் மறக்கக்கூட முடியவில்லை. சில அரசியல் கட்சியினர் பேனர் வைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தும், சிலர் பேனர் வைக்கமாட்டோம் என உத்தரவாதமும் அளித்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு பேனர் வைக்கிறோம் என்பது வேதனையாக இருக்கிறது. பிரதமரை வரவேற்க பேனர் மட்டும் தான் இருக்கிறதா,” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் பிரதமர் மோடிக்கு பேனர் கலாச்சாரத்தை நிறுத்துங்க என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசை கடுமையாகச் சாடியுள்ளார். “ அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி,அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி!” என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சியையும், தமிழ் மொழியின் பெருமைகளையும் உலக அளவில் பேசி வரும் பிரதமர் மோடி தலையிட்டு பேனர் கலாச்சாரம் தமிழகத்தில் முற்றிலும் நீங்குவதற்கான நடவடிக்கையாக “வேண்டாம் பேனர்” என்று முடிவெடுத்தால் உண்மையிலேயே ஒரு மாற்றம் உருவாக காரணமாக அமையலாம்.
– வணக்கம் இந்தியா