தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா கனடாவில் தொடரும் போராட்டங்கள்!
வாஷிங்டன்: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராடி வரும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வட அமெரிக்கத் தமிழர்களின் அமைதிப் பேரணி தொடர்கிறது.
கடந்த வாரம் பாஸ்டன், நியூயார்க், நெவார்க், டல்லாஸ், வாஷிங்டன் டிசி, மாரிஸ்வில், சார்லட், அட்லாண்டா, சான் ஃப்ரான்சிஸ்கோ, ஒர்லாண்டோ,ஹூஸ்டன், சிகாகோ, மினியாபோலிஸ்-செயிண்ட் பால், டெட்ராய்ட் மிச்சிகன் ஆகிய நகரங்களில் அமெரிக்கத் தமிழர்களின் அமைதிப் பேரணி நடைபெற்றது. பெருவாரியான தமிழர்கள் பங்கேற்று ஆதரவு முழக்கங்கள் எழுப்பினார்கள்.
அமெரிக்க அளவில் ஒருங்கிணைப்பாளர்கள், ஒவ்வொரு நகரங்களில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுடனும் ஒன்றினைந்து ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள். தூத்துக்குடி போராட்டக்களத்தில் இருப்பவர்களுடன் தொலைபேசி வழியாக கள நிலவரம் பற்றிக் கேட்டு பிரச்சனைகளை முழுமையாக தெரிந்து கொண்டார்கள். தொடர் ஒருங்கிணைப்பும் நடைபெற்று வருகிறது.
கடந்த வாரப் பேரணிகளின் தொடர்ச்சியாக, இன்னும் கூடுதல் நகரங்களில் அமெரிக்காவில் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவான இந்த போராட்டம் தொடர்கிறது. க்ளீவ்லேண்ட் ஒஹாயோ வில் ஏப்ரல் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் Cleveland Public Square ல் போராட்டம் நடைபெற உள்ளது.
அதே நாளில் காலை 11 மணி அளவில் ஜெர்ஸி சிட்டிJFK Blvd ல் உள்ள Leonard Garden Park -ல் நியூஜெர்ஸி வாழ் தமிழர்கள் ஒன்று கூடி அமைதிப் பேரணி நடத்த உள்ளார்கள்.
அன்று காலை பத்தரை மணி அளவில் ப்ரூக்ஃபீல்ட் விஸ்கான்சினிலும் தமிழர்கள் திரண்டு தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்ப உள்ளார்கள். River Road ல் உள்ள Mitchell Park -ல் நடை பெறுகிறது.
மற்றும் கனடாவிலும் ஞாயிற்றுக் கிழமை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடக்கோரி அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. ட்ரோண்டொ நகரில் Dundas Square ல் இந்தப் போராட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளார்கள்.
தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை அகற்றி, காற்று, குடிநீர் மாசுபடுவதை தடுத்து, கேன்சர் நோயிலிருந்து மக்களைக் காப்பது என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் மட்டுமே வட அமெரிக்கா முழுவதும் இந்த அமைதிப் பேரணி நடைபெறுகிறது. ஒத்துழைப்பு தந்து பங்கேற்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் மிகவும் கடமைப் பட்டுள்ளதாக வட அமெரிக்க ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்