ரஜினிகாந்த் மீது அளப்பரிய மரியாதை உண்டு… சொல்பவர் சீமான்!
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தொடர்ந்து எதிர்த்து வரும் சீமான், அவர் மீது அளப்பரிய மரியாதை உண்டு என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள சீமான், ரஜினிகாந்த் கொரோனோ வைரஸ் வந்தவர் போல் இருக்கிறார் என்று சொன்ன நாம் தமிழர் கட்சிக்காரரை கண்டித்ததோடு, ரஜினிகாந்த் மீது மரியாதை உண்டு என்றும் கூறியுள்ளார்.
“ரஜினிகாந்தோட நான் முரண்படுகிறேன் என்றால் அவருடைய அரசியலோடு அவரோட கருத்து மீது முரண்படுகிறேன். தனிப்பட்ட ரஜினிகாந்த் மீது எனக்கு அளப்பரிய மரியாதை உண்டு. அவருடைய படங்களை நான் ரசிப்பவன்.
என்னுடைய திருமணத்திற்கு எத்தனையோ பேருக்கு அழைப்பு கொடுத்தேன். பல பேர் வரவில்லை. ரஜினிகாந்துக்கு நான் நேரில் கூட கொடுக்கவில்லை. தம்பி தமிழ்க்குமரன் தான் அழைப்பிதழைக் கொண்டு சென்று கொடுத்தார்.
தன் கைப்பட வாழ்த்து எழுதி ரஜினிகாந்த் என்று கையெழுத்துட்ட கடிதம் அனுப்பி வைத்தார். அது என்னிடம் இன்னும் இருக்கு,” என்று சீமான் பேசியுள்ளார்.
கொரோனோ வைரஸ் வந்தவர் என்றதும் சிரித்த தன்னுடைய தொண்டர்களைப் பார்த்து சிரிப்பதற்காகச் சொல்லவில்லை, சிந்திப்பதற்காக சொல்கிறேன் என்று, அப்படி எழுதியவரை கண்டித்ததையும் சீமான் பேச்சிலும் செய்கையிலும் காண முடிந்தது.
ஒரு வேளை ரஜினிகாந்துடன் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டாரோ சீமான்?