ரஜினி மக்கள் மன்றத்தின் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி… 5 ஆயிரம் மரக்கன்றுகள் விநியோகம்… நடிகர் ஜீவா பங்கேற்பு!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற ரஜினி மக்கள் மன்றத்தின் மழை நீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணியில் திரளான பெண்கள் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் கே.கே .முருகு பாண்டியன் வழிகாட்டுதலுடன் கடந்த மே 16 முதல் பொது மக்களுக்கு தொடர்ந்து 50 நாட்களாக புதுக்கோட்டையில் குடிநீர் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வருங்காலத் தண்ணீர் தேவையை நிறைவேற்றும் தொலை நோக்குத் திட்டமாக மரம் வளர்த்தல், மழை நீர் சேமிப்பு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான பேரணி நடந்தது.
பேரணியை நடிகர் ஜீவா, சிவகங்கை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் இராமேஷ்வரன் தொடங்கி வைத்து பங்கேற்றனர். புதுக்கோட்டை அரசு அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. வழி நெடுக பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்களிடம் நடிகர் ஜீவா, ராமேஷ்வரன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச மரக்கன்றுகளை வழங்கி, மழை நீர் சேமிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மகளிர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரும் பொதுமக்களும் பேரணியில் கலந்து கொண்டனர்.
உடனடத் தேவைக்காக தமிழகம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்து வரும் ரஜினி மக்கள் மன்றத்தினர், தொலை நோக்குடன் மழை நீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருவது குறிப்பிடத் தக்கது.
[ See image gallery at a1tamilnews.com]