உடன் பிறந்தோர் நலம் வாழ கன்னியவள் பொங்கலிட்டாள்!
கதிரவனின் கரங்கள் அணைத்து
கதிரிங்கே விளைந்ததின்று !
கார் ,கூதிர் நாளில் வளர்ந்து
முன் பனியில் கதிர் முற்றி
நெல் மணியை நாம் உண்ண
வந்ததொரு தை நாளாம் !
வட செலவின் துவக்கத்திலே
பழையவை தனைக் கழித்து
புதியன இல் புகுத்தி
பீளை,ஆவாரம் மலரெடுத்து
வேப்பிலை தனைச்
சேர்த்து வீட்டுக்
கூரையில் அவை இருக்க
வேண்டாதவை எரித்து
புதியவராய் பிறப்போமிங்கே !
புத்தாடை தனை உடுத்தி
முக்கனியில் வாழை வைத்து
புது அரிசி படியிலிட்டு
தித்திக்கும் பொங்கலிட்டு
திகட்டாத கரும்பு வெட்டி
எத்திக்கும் மகிழ்ச்சி பொங்க
செந்தமிழில் சொல் எடுத்து
பைந்தமிழில் பாட்டிசைத்து
எங்கும் நிறை கதிரவனை
கரம் கூப்பி வணங்கிடுவோம் !
சோறு தனை எமக்குத் தர
ஏர் இழுத்த காளையவன்,
ஆநிரைத் தோழனவன்
அவன் புகழ் பார் ஓங்க
போற்றிடுவோம் பொங்கலிட்டு !
பானையிலே மஞ்சள் கட்டி
அதை இழைத்து முகத்திலிட்டு
உடன் பிறந்தோர் நலம் வாழ
கன்னியவள் பொங்கலிட்டாள்
இத்தனையும் நிகழுமெங்கள்
தாய்த் தமிழ் திருநாட்டை
நினைவினிலே யாம் கொணர்ந்து
புதுப் பானை பொங்கலிட்டோம் !
பொங்கலது பொங்கட்டும்
மகிழ்ச்சி என்றும் தங்கட்டும் !
அனைவருக்கும் தைத் திருநாள்
வாழ்த்துகள் !
– பிரதீபா பிரேம், அட்லாண்டா, யு.எஸ்.ஏ