இந்தியா மீதான மரியாதை உயர்ந்துள்ளது – பிரதமர் மோடி!
டெல்லி: அமெரிக்கச் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, இந்தியாவின் மீதான நம்பிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பிய பிரதமருக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் கட்சிக்காரர்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது,
“கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா மீதான மரியாதை உயர்ந்துள்ளது. மீண்டும் பெருவாரியான வெற்றியுடன் பாஜகவை ஆட்சியில் அமர்த்திய மக்கள் தான் அதற்கு காரணம். முதல் தடவை பதவியேற்ற பிறகு 2014ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றேன். தற்போது 2019ம் ஆண்டு அங்கு சென்ற போது மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டேன்.
இந்தியா மீதான மரியாதை, இந்தியா மீதான ஆர்வமும் உற்சாகமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. 130 கோடி மக்கள் மீண்டும் அதிக பலத்துடன் இந்த ஆட்சியை அமைத்தது தான் காரணமாகும்.
ஹூஸ்டன் ஹௌடி மோடி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்டது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அங்கே ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் வந்திருந்தனர். அமெரிக்கா, டெக்சாஸ், ஹூஸ்டனில் உள்ள இந்திய சமூகத்தினர் பெரும் திரளாக வந்திருந்தது மிகவும் முக்கியமானது.
என்னை வரவேற்க இங்கே திரளாக வந்திருப்பதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து இந்தியர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றி,” என்று குறிப்பிட்டார்.
– வணக்கம் இந்தியா