தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி! முதல்வர் எடப்பாடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பரவி வரும் வேகத்தை கட்டுப்படுத்தவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தெரபி அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவரது உடலில் இருந்து ரத்தம் எடுப்பதுபோல் பிளாஸ்மாக்கள் பிரித்து எடுக்கப்படும். இந்த மாதிரிகளைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
இந்தியாவில் ஏற்கனவே டெல்லி, கேரளா, குஜராத், பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் பிளாஸ்மா சிகிச்சையை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்திலும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி நிறுவவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து விருப்பம் இருப்பவர்கள் பிளாஸ்மா தானம் செய்யலாம். சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் தானம் செய்ய இயலாது.