பகிரி – இது பக்கா அரசியல் பகிடி!
இந்த சமூக அமைப்பு என்பதே மக்களைக் காப்பாற்றத்தான். அழிக்க அல்ல… இந்த சிந்தனையைத் தூண்டும் வகையில் சமகால அரசியல் அவலங்களை வெளுத்து வாங்கும் படங்கள் சமீபகாலமாக வரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் மதுவிலக்குப் பின்னணியில் இருக்கும் அரசியலை முழுக்க முழுக்க பகடியாக விமர்சித்திருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
படம் தொடங்குவதே ஒரு தொலைக்காட்சி விவாதத்தில்தான். மதுவை ஏன் ஒழிக்க முடியவில்லை? என்ற விவாதத்திலேயே அரசியல் கட்சிகளின் சாயத்தை வெளுக்க துவங்குகிறார் இயக்குநர். அதன் பின் படம் முழுக்க சரக்கும் சரக்கு அரசியலும் தான்.
மகன் விவசாயம் பார்க்க வேண்டும் என்று துடிக்கும் அப்பா, அப்பாவின் வற்புறுத்தலால் விவசாயம் படித்தாலும், அரசாங்க வேலையே லட்சியம் என்று மதுபானக் கடையில் வேலை பார்க்க ஆசைப்படும் மகன் இருவரது ஆசையும் என்ன ஆனது என்பதுதான் ஒண்ணே முக்கால் மணி நேர பகிரி படம்.
சிம்பிளான கதை. ஆனால் காட்சிக்கு காட்சி தமிழ்நாட்டு அரசியலைக் காய்ச்சி எடுத்திருக்கிறார் கார்வண்ணன். எந்த கட்சியையும் விட்டு வைக்கவில்லை.
அதிலும் அந்த தலைவர் டிபி.கஜேந்திரனுக்கு மூன்று வீடுகளில் இருந்து ஃபோன் வரும் காட்சி, மதுபானக் கடையில் வேலைக்கு சேர்வதற்கான நேர்முகத் தேர்வு, மதுவிலக்கை வைத்து கட்சித் தலைவர்கள் செய்யும் அரசியல் என படம் முழுக்கவே கைதட்டல்கள். படம் முழுக்கவே இன்றைய அரசியல் தலைவர்களின் அயோக்கியங்களைக் காட்டும் குறியீடுகள் தான்.
காட்சிகள் மட்டும் போதுமா? வசனங்களிலும் வாள் வீசுகிறார். ‘எப்படிய்யா மதுவிலக்கை கொண்டு வர விட்ருவோம்? மதுபான ஆலையெல்லாம் எங்ககிட்ட தானே இருக்கு…’ என்று ஒரு பக்கம் போராட்டம் நடத்திக்கொண்டே மறுபக்கம் ஆளுங்கட்சிக்கு ஆறுதல் சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் வசனம் முதல் ‘வாழ வைக்கிற வேலைல வர்ற காசு தாண்டா நல்லது. சாக வைச்சு வர்ற காசு கவர்ன்மெண்ட் காசா இருந்தாலும் வேண்டாம்,’’ என்று நாயகனின் தந்தை பேசுவது வரை எல்லாமே நறுக் வசன்ங்கள்.
படத்தின் ஹீரோ பிரபு ரணவீரன் கனா காணும் காலங்கள் தயாரிப்பு. அம்மாவுக்கும் காதலிக்கும் சண்டையை மூட்டிவிட்டு பின்னர் காதலை சொல்லும் இடத்தில் கவர்கிறார். அரசாங்க வேலைக்காக அலையும் இடங்களில் நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார். வெல்கம் ப்ரோ!
கதாநாயகியாக ஷ்ரவ்யா… தெலுங்கு வரவு. அழகு மயில். நடிப்பிலும் சூப்பர் தான்.
படத்தை கலகலப்பாக கொண்டு செல்லும் பொறுப்பை இனிதே கையில் எடுத்திருக்கிறார்கள் ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், டிபி.கஜேந்திரன் உள்ளிட்டோர்.
பெரிய ஆர்ட்டிஸ்ட்கள் இல்லை என்றாலும் கூட எடுத்துக்கொண்ட விஷயத்தாலும், சாட்டையடி வசனங்களாலும் கவர்கிறார் இசக்கி கார்வண்ணன்.
படத்தின் ஒரே மைனஸ் பின்னணி இசை. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். காமெடி படம் என்பதால் லாஜிக் விஷயத்தில் இயக்குனருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது. காட்சிகள் சரியாக கோர்க்கப்படாதது ஆங்காங்கே தெரிகிறது. கதைக்கு பொருத்தமான டைட்டிலையும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.
படம் பேசுவதை விட படத்தைப் பார்த்தவர்கள் மதுவிலக்கு பற்றி சிறிதாவது சிந்திப்பார்கள். அதுவே இசக்கி கார்வண்ணனுக்கு கிடைத்த பெரிய வெற்றி தான்.
இன்றைய சமுதாயத்துக்கு தேவையான ஒரு பக்கா அரசியல் பகடி – பகிரி!
–க ராஜீவ்