சிபிஐ கஸ்டடியிலும் அஞ்சு விரல்களைக் காட்டி ப.சிதம்பரம் கெத்து!
டெல்லி: நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் அஞ்சு விரல்களைக் காட்டி கெத்தாக செய்தியாளர்களிடம் பதிலளித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் செப்டம்பர் 5ம் தேதி வரை, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, சிபிஐ காவலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ கைதுக்கு மற்றும் காவலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் மனுக்கள் செய்யப்பட்டது. நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார் ப.சிதம்பரம்.
விசாரணை முடிந்து மீண்டும் சிபிஐ காவலில் செல்லும் போது, செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்டார்கள்.
“15 நாட்கள் சிபிஐ காவலில் உள்ளீர்கள். நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா,” என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் ’5 சதவீதம்’ என்றார் ப.சிதம்பரம்.
என்ன ’5 சதவீதம்’ என்று பத்திரிக்கையாளர் பதில் கேள்வி எழுப்பினார்.
“5 சதவீதம் பற்றித் தெரியாதா? 5 சதவீதம் பற்றி ஞாபகம் இல்லையா” என்று கேட்டுவிட்டு சென்றார்.
செய்தியாளர்கள் மத்தியில் ‘ஜிடிபி’ என்று ஒருவர் அதற்கு பதிலளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான முதல் காலாண்டிற்கான ஜிடிபி 5 சதவீதமாகக் குறைந்துள்ளதை குறிப்பிடும் வகையில் பதில் சொல்லிவிட்டு, ஒரு மர்மப் புன்னகையுடன் சிரித்து விட்டுச் சென்றுள்ளார் ப.சிதம்பரம்.
A quick reminder by @PChidambaram_IN on why he's feared by the BJP govt. #ModiMadeEconomicCrisis pic.twitter.com/9XOdVf6saT
— Congress (@INCIndia) September 3, 2019
சமீபத்திய பேட்டி ஒன்றில், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பதிலளிக்கையில்,”கைது செய்து கேள்வி கேட்டால் தான் நிலை குலைந்து உண்மையைச் சொல்லுவார்கள். அதுவும் மூத்த வழக்கறிஞர் போன்ற ப.சிதம்பரத்திடம், அப்படித்தான் உண்மையை வரவழைக்க முடியும்,” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
பாஜக அரசின் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் தான் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். ப.சிதம்பரமோ, கிடைத்த 30 செகண்ட் கேப்பில் ’5 சதவீதம்’ என்று பட்டாசைக் கொளுத்தி விட்டுப் போயுள்ளார்.
பொருளாதார மந்தநிலை பாஜக அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கி வருகிறது. பொருளாதார வல்லுனர்கள் பலரும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
– வணக்கம் இந்தியா