நீட் தேர்வு முடிந்தது… கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து!
சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது.
பல்வேறு நகரங்களில் தேர்வு எழுத வந்த மாணவர்களிடம், நண்பகல் 12 மணி முதலே கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டு, அதன் பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தாங்கள் அணிந்து வந்த அணிகலன்கள், துப்பாட்டாக்களை மாணவிகள் அகற்றிய பின்னரே, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு இல்லாமல் வந்த மாணவர்களும், காலதாமதமாக வந்த மாணவர்களும் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
பானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிசாவில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் 15.19 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியாகிறது.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் கூறுகையில், “நீட் தேர்வு எளிமையாக இருந்தது. இயற்பியல் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. மாநில பாடத் திட்டத்தில் இருந்து குறைவாகவே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன,” என்றனர்.