வரலாற்று பாரம்பரியமிக்க நகராக மதுரையை அறிவிக்க வேண்டும்! – சு வெங்கடேசன் எம்பி
“மதுரை வெறும் நகரமல்ல. தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரீகத்தின் தாயகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்ட மதுரை இன்றும் மக்கள் வாழும் நகரமாக உள்ளது.
மத்திய – மாநில அரசுகளின் தொல்லியல் துறையினர் மதுரைக்கு அருகே கீழடியில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 2 ஆயிரத்தும் 300 வருடங்களுக்கு முற்பட்ட எண்ணற்ற பொருட்களும், பழம்பெரும் நாகரீகத்தின் சான்றுகளும் கிடைத்துள்ளன. அங்கே கிடைத்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் அந்த நாகரீகத்தின் சான்றை உலகிற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகள் மதுரையைச் சுற்றியுள்ள 20 கிலோ மீட்டர் தொலைவுக்குள் 12 இடங்களில் கிடைத்துள்ளன. வேறு எந்த ஒரு நகரத்திற்கும் இல்லாத சிறப்பு இது. இந்தியப் பண்பாட்டு வரலாற்றில் தனித்த இடத்தையும், மனிதகுல வளர்ச்சிக்கு தனித்துவமான பங்களிப்பையும் வழங்கிய நகரம் மதுரை ஆகும்.
மதுரையை உலகப் பாரம்பரிய நகரமாக, வரலாற்றுப் பாரம்பரியமிக்க நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்,” என்று சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தினார்.
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தில் மதுரையை பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன் என்று வாக்குறுதி அளித்து இருந்தார். சொன்னது போலவே, அவருடைய முதல் பாராளுமன்ற உரையிலேயே அந்த கோரிக்கையை எழுப்பியுள்ளார்.
– வணக்கம் இந்தியா