‘நிர்மூலமான நீலகிரி மாவட்டம்.. அதிமுக அரசு மெத்தனம்’ – மு.க.ஸ்டாலின் சாடல்!

உதகமண்டலம்: மழை, வெள்ளத்தால் நீலகிரி மாவட்டம் நிர்மூலமாகி உள்ளது. மாநில அதிமுக அரசு துரித நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை விவரம் வருமாறு: “நிர்மூலமாகி இருக்கும் நீலகிரி மாவட்ட மக்களை 2வது நாளாக சந்தித்தேன். பெய்திருக்கக்கூடிய கனமழையின் காரணமாக, நீலகிரி மாவட்டமே புரட்டிப் போடப்பட்ட சூழலில் தவிக்கிறது. இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்தால்தான் உடனடி நிவாரணம் மக்களுக்கு சென்று சேர்ந்திடும். மழையின் காரணத்தால்
 

‘நிர்மூலமான நீலகிரி மாவட்டம்.. அதிமுக அரசு மெத்தனம்’ – மு.க.ஸ்டாலின் சாடல்!உதகமண்டலம்:  மழை, வெள்ளத்தால் நீலகிரி மாவட்டம் நிர்மூலமாகி உள்ளது. மாநில அதிமுக அரசு துரித நடவடிக்கைகள் எடுக்காமல்  மெத்தனமாக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை விவரம் வருமாறு:

“நிர்மூலமாகி இருக்கும் நீலகிரி மாவட்ட மக்களை 2வது நாளாக சந்தித்தேன். பெய்திருக்கக்கூடிய கனமழையின் காரணமாக, நீலகிரி மாவட்டமே புரட்டிப் போடப்பட்ட சூழலில் தவிக்கிறது. இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்தால்தான் உடனடி நிவாரணம் மக்களுக்கு சென்று சேர்ந்திடும்.

மழையின் காரணத்தால் இதுவரை ஏறக்குறைய 6 பேர் இறந்து போயிருக்கின்றார்கள். அந்தக் குடும்பத்திற்கு உரிய நிதி வழங்குவது மட்டுமல்லாமல், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விளை நிலங்கள் மூழ்கி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. எனவே, அதற்குரிய நஷ்ட ஈடு வழங்கிட வேண்டும்.

கடந்த இரு நாட்களில் சுமார் 150 கி.மீட்டர் பயணம் செய்திருக்கின்றேன். ஏறக்குறைய 150 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருக்கின்றது. அதனால், சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றது. . 100-க்கு மேற்பட்ட இடங்களில், சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கின்றது.

அரசைப் பொறுத்தவரையில் குறைந்த பட்ச முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் கூட இந்த நிலை வந்திருக்காது. எனவே, இனி மேலும் மெத்தனமாக இல்லாமல். இப்பொழுதாவது, அரசு இயந்திரத்தை துரிதப்படுத்தி விரைவாக முடுக்கிவிட வேண்டும்.

ஆனால், ஏதோ பெயரளவிற்கு ஓரிரு அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்கின்றார்கள். அனுப்பி வைக்கப்பட்ட அமைச்சர்களோ, புகைப்படத்திற்கும், பத்திரிக்கைகளில் செய்திகள் வரவேண்டும் என்ற பப்ளிசிட்டிக்காகவும் வந்துவிட்டு மக்களைக் கூட சந்திக்காமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே, நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் இங்கேயே தங்கி எல்லா பகுதிகளுக்கும் சென்று பணிகளை விரைவு படுத்தும் வகையில் ஈடுபடப் போகின்றார். அப்பொழுது என்னென்ன குறைகள் இருக்கின்றன, மக்களின் பிரச்சினைகள், என்னென்ன நிவாரணப் பணிகளில் இந்த அரசு ஈடுபட வேண்டும் என்பதை எல்லாம் தொகுத்து, நம்முடைய எம்.பி மற்றும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சந்தித்து அதனை வலியுறுத்த இருக்கின்றார்கள்.

எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகமும் முனைப்பாக தன்னுடைய பங்கை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாய், இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி அவருக்கென்று இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 2 கோடி ரூபாய், மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ராஜ்யசபா உறுப்பினர்கள் சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆலந்தூர் பாரதி, வில்சன் மற்றும் சண்முகம் ஆகியோர் ஆளுக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கி ஒட்டுமொத்த நிதியையும் சேர்த்து சுமார் 10 கோடி ரூபாய் உடனடி நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருக்கின்றது.

இறந்தவர்களுடைய குடும்பத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு இருக்கின்றது”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web