தமிழ்க் காதல்! நின் ஒன்று மொழிவல் கேளீர்!
நடுச் சாமம் உறக்கமில்லை
நவில்வதற்கோ எவருமில்லை
நாற்பொழுதும் உன் நினைவால்
நங்கையவள் மெலிந்திட்டேன்!
நூற்கும் கவியெல்லாம்
நுதலழகாள் திருமுகமே
நுணுக்கச் சேயிழை புனை
நுண்மருங்குலாள் நினைவுகளே !
மான் அன்ன நடையினாளே
மீன் அன்ன விழியினாளே
வான் அன்ன நெஞ்சினாளே
தேன் அன்ன மொழியினாளே !
நித்தமும் உன் நினைவே
நிலவுதனில் உன் பொலிவே
நிழல் போல் நீ பிணைந்தே
நின்னுள் ஒரு மாயம் செய்தாய் !
உன்மீதினில் காதல் உற்றேன்
ஊணுறக்கம் ஒழித்திட்டேன்
உற்றானும் உடையவனும்
ஊழ் பயனே என்றுரைக்க வித்திட்டேன் !
மேலும் கேளீர்!
தரணியென்னைத் தடுத்தாலும்
தங்கமதை அளித்தாலும்
தழல் மொழியால் சுட்டாலும்
தமிழ் உன்னைக் கைவிடேன் !
உயிரென்பேன் உனை யானும்
ஒரு நொடியும் அகன்றிடேன்
உளந்தனிலே உனைக் கொண்டேன்
உன்னாலே உருக் கொண்டேன்.
தமிழே என் தோழியே
தமரகத்தில் நிறைந்தவளே
தரணியில் நான் உய்யும்வரை
தனித் தமிழால் முழக்கஞ் செய்வேன் !
– த.ச.பிரதீபா பிரேம், அட்லாண்டா, யு.எஸ்.ஏ