கொரோனா பரவும் இந்த நாட்களில்…
அச்சம் மொத்தம் களைவோம்
அடங்கி வீட்டினுள் இருப்போம்
ஊரடங்குச் சட்டம் மதிப்போம்
கூட்டம் கூடுவது தவிர்ப்போம்
இசையால் மனதை நிறைப்போம்
நூல்கள் பலதை படிப்போம்
தேநீர் பருகும் வேளையில்
ஜன்னல் வழி பறவை ஒலி கேட்போம்
காலைக் குளிரின் பொழுதில்
புல்வெளியில் கால் பதித்து நடப்போம்
மாலை வந்து வாட்டினால்
நிலவை கூரைக்குள் அழைப்போம்
இருண்ட இரவு நீளுகையில்
பிள்ளைகள் கதைகள் கேட்போம்
பொருட்கள் குவிப்பது தவிர்ப்போம்
பிறரின் தேவைகள் உணர்வோம்
வயதானவர் பற்றி சிந்திப்போம்
உதவிகள் முடிந்தால் செய்வோம்
கைகள் அடிக்கடி கழுவுவோம்
முகத்தை தொடுவது தவிர்ப்போம்
வதந்திகள் புரளிகள் மறுப்போம்
உண்மைகள் புரிந்து நடப்போம்
நம்மை நாமே உணர்வோம்
நம் உறவுகளை மேலும் புரிவோம்
அமைதி காக்க முயல்வோம்
அன்பை பரிமாறி மகிழ்வோம்
வீட்டினுள் இருப்பது கடினமா
வீடில்லாதவர் நிலையென்ன நினைப்போம்
வேலைக்கு போவது பயமா
மருத்துவ ஊழியர் நிலை நினைப்போம்
பொழுதுபோக்கு இல்லை வருத்தமா
வருமானம் இல்லாதார் பற்றி நினைப்போம்
பயணம் ரத்தென கோபமா
இறந்தவர் நிலை கொஞ்சம் நினைப்போம்
நடப்பது கடக்கும் புரிவோம்
நம்பிக்கை வைத்து நகர்வோம்
-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.