பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்தார் கமல் ஹாசன்!
சென்னை: பள்ளிக்கரணையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்ததால் இறந்து போன இளம் பெண் சுபஸ்ரீயின் வீட்டுக்குச் சென்று அவருடைய பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் கமல் ஹாசன்.
எம்.டெக் முடித்து விட்டு ஐடி துறையில் பெருங்குடியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த 23 வயது சுபஸ்ரீ, அலுவலகத்திலிருந்து திரும்பும் போது விபத்து நடந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதிமுக, திமுகவினர் பேனர் வைக்கக்கூடாது என்று அந்தந்த கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
பேனர் வைத்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர். கட்சிக் கூட்டங்களில் சாலையில் பேனர்கள் தென்படவில்லை.
ஆனால், இறந்து போன சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தவர்கள் யாருமில்லை. கமல் ஹாசன் தான் முதல் நபராகச் சென்று சோகத்தில் மூழ்கியிருக்கும் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
– வணக்கம் இந்தியா