பேனர் கலாச்சாரத்தை நிறுத்துங்க… பிரதமர் மோடிக்கு கமல் ஹாசன் கோரிக்கை!
சென்னை: பேனர் கலாச்சாரத்திற்கு முடிவுகட்டுங்கள் என்று பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் மூலம் பிரதமர் மோடிக்கு கமல் ஹாசன் கூறியுள்ளதாவது,
“மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு,
தமிழ்நாடும் தமிழர்களும் சுபஸ்ரீயின் இழப்பிலிருந்து மீண்டு வருவதற்கு தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் தமிழக அரசு சார்பில் பேனர்கள் கட்டுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்கள்.
நீங்கள் முதல் வழிகாட்டியாக இருந்து, பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த பேனர் கலாச்சாரத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால், தமிழர்கள் மீதான உங்கள் அக்கறையை பறை சாற்றுவதாக அமையும். அதுவே உங்களுக்கு மிகப்பெரிய விளம்பரமாகவும் அமையும்” என்று கூறியுள்ளார்.
If you act as a pioneer in taking the first step to put an end to this haphazard banner culture, it will reflect your concern towards the sentiments of Thamizhians, and that in itself will garner you the greatest publicity possible. Jai Hind! (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) October 2, 2019
சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி அக்டோபர் 11, 12 தேதிகளில் மாமல்லபுரம் வர உள்ளார். அவர்களை வரவேற்பதற்காக தமிழக அரசின் சார்பில் 14 பேனர்கள் வைப்பதற்கு உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி தான் கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு ட்வீட் செய்துள்ளார். கடைசி வரியில் “பேனர்களை தடுத்தால் அதுவே உங்களுக்கு பெரிய விளம்பரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது.
– வணக்கம் இந்தியா