ஏடிஎம் மூலம் பரவுகிறதா கொரோனா! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த போதிலும் சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தின் மூலம் கொரோனா பரவி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் பரவி வருகின்றன.
வங்கிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஏடிஎம்கள் மட்டுமல்ல தனியாக செயல்பட்டு வரும் ஏடிஎம்களிலும் பராமரிப்பு சரியாக இல்லை என்றும் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களுக்காக சானிடைசர்கள் எதுவும் வைக்கப்படுவதில்லை எனவும், இதனால் ஏடிஎம்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
சென்னையின் ஒரு சில இடங்களில் விசாரணையின் போது இந்தத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் செயல்பாட்டில் இருக்கும் அனைத்து ஏடிஎம் மையங்களும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களின் உபயோகத்திற்காக சானிடைசர் வைக்கப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் ஏடிஎம் மையங்களில் செக்யூரிட்டி மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தீவிரப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.