அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு சரியானதா?
அயோத்தியில் ராமர்கோவில் கட்ட பூமிபூஜை நடப்பதற்கு முந்திய நாள் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அந்த விழா தேசிய ஒருமைப்பாடு, சகோதரத்துவம் கலாச்சார ஒற்றுமையை அடையாள படுத்துவதாக கூறினார்.
மத்தியப் பிரதேச முன்னாள் காங்கிரஸ் முதல்வர் கமல்நாத் தனது இல்லத்தில் ஹனுமான் சாலிசா சத்சங் நடத்தினார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ராமர்கோவில் கட்ட 11 வெள்ளி செங்கற்களை அனுப்பியது.
எளிமை,தைரியம், அடக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, இவற்றின் அடையாளம் ஸ்ரீ ராமர். பகவான் ராமர், அன்னை சீதா ஆசியுடன் பூமிபூஜை சிறப்பாக நிறைவேற்றவேண்டும் என வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் பிரியங்கா காந்தி. வழக்கில் இருந்த ராமர் கோவில் பூட்டை 1985 இல் திறந்துவிட்டதே அன்றைய பிரதமர் ராஜீவகாந்தி தான் என நினைவூட்டுகிறார் கமல்நாத்.
ராமரின் தாயார் பிறந்த சந்டக்ஹுரியை புனித ஸ்தலமாக்குதல், மற்றும் கௌசல்யா மாதா கோவில், துர்துரிய வால்மீகி ஆசிரமம் எழுப்ப உள்ளதாக சத்திஸ்கர் முதல்வர் புபேஷ் பகெல் அறிவித்துவிட்டார். குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் ராமர் கோவில் கட்டும் நிதிக்கு தனது குடும்பம் சார்பாக ரூ 21 ஆயிரம் அறிவித்துள்ளார். நான் நாத்திகன் அல்ல, விரைவில் இந்தியாவிலும் குஜராத்திலும் ராமராஜ்யம் மலரும் என்றும் உறுதியளித்துள்ளார்.
ஹிந்திபேசும் மாநிலங்களான உ.பி. ம.பி. சத்திஸ்கர், ராஜஸ்தான், பிஹார் மாநிலங்களில் அயோத்தி ராமரை வைத்து பா,ஜ வாக்குகளை கவர்ந்துவிட கூடாது என்பதற்காக சுதாரித்துக்கொண்ட காங்கிரஸ், ராமர்கோவில் விவகாரத்தில் நாட்டுநடப்பை ஆதரித்துள்ளது.
கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்குடன் கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது, மலப்புரம் லோக்சபா தொகுதியில் ராகுல் வெற்றிக்கு முஸ்லிம்லீக் பெரிதும் உதவியது. மலப்புரம் பணக்காடில் நடந்த முஸ்லீம் லீக் கட்சியின் காணொளி தேசியக்குழு, பிரியங்காவின் அறிவிப்பு இந்தநிலையில் தேவையில்லாதது, அந்த கருத்துக்கு எங்களது மறுப்பை தெரிவிக்கறோம் என கூறியுள்ளது.
பாபர் மசூதி பிரச்னை உச்சநீதிமன்ற தீர்ப்புடன் முடிந்துவிட்டது. அதுபற்றி விவாதிப்பது நாட்டுநலனுக்கு நல்லதல்ல என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் அமைப்புச் செயலாளர் மொஹம்மது பஷீர் எம்.பி. தெரிவித்து இருந்தார்.
நாட்டில் உண்மையான மதசார்பின்மை கட்சியாக உள்ள காங்கிரஸ் தனது மதசார்பின்மை கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மதசார்பின்மை, சமூகநீதி இவைகளை காங்கிரசுக்கு யாரும் போதிக்க அவசியம் இல்லை.
சாதி, மதம் பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைத்த வரலாறு காங்கிரசுக்கு உண்டு. இதை வாக்காளர்களிடம் விளக்கத் தெரியாததால் தான் சில கட்டங்களில் காங்கிரஸ் தோல்விகளை சந்தித்தது. இனியாவது துடிப்புடன் எழட்டும்.
– வி.எச்.கே.ஹரிஹரன்