பிரியங்காவுடன் தர்ணாவில் ஈடுபட்ட உத்திர பிரதேச காங்கிரஸ் தலைவர் மீது வழக்கு!!
பிரியங்காவின் இந்த மௌன போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று முன்தினம் உத்தர பிரதேச தலைநகர் லக்னோ சென்றார். மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டார்.
லக்னோ சென்றடைந்த அவர், உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறைகள் மற்றும் மாநில அரசு போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து அங்குள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.
பிரியங்காவின் இந்த மௌன போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் லல்லு மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி இந்த போராட்டத்தை நடத்தியதாக அஜய்குமார் லல்லு உள்பட 3 பேர் மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்டதற்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக லக்னோ போலீஸ் கமிஷனர் தாகூர் தெரிவித்தார்.